Tuesday, January 8, 2013

கற்பழிப்பவர்களை தூக்கிலிட வேண்டும்: உறவினரால் கற்பழிக்கப்பட்டு தாயான பெண் ஹைகோர்ட்டில் மனு

கற்பழிப்பு குற்றத்தைச் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று உறவினரால் கற்பழிக்கப்பட்டு ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ள இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா(25)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

 அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, என்னை எனது தந்தை வழி உறவினர் ரமேஷ் 2008ம் ஆண்டு கற்பழித்தார். இதனால் நான் கர்ப்பமானேன். இதுபற்றி கிண்டி போலீசில் புகார் கொடுத்தேன். அதற்கு அங்குள்ள போலீஸ் அதிகாரிகள், ‘மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு நடப்பது சகஜமாகிவிட்டது. ஒரே நாளில் நடக்கும் கற்பழிப்பால் குழந்தை உருவாகாது' என்றெல்லாம் கேலி செய்யும் விதத்தில் பேசினர். அதைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான் புகார் கொடுத்தேன். 

ரமேஷை பெண் இன்ஸ்பெக்டர் அழைத்து வந்தார். ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு புகாரை திரும்பப் பெறும்படி காவல் நிலையத்தில் ‘பஞ்சாயத்து' நடத்தப்பட்டது. ஆனாலும் நான் சம்மதிக்கவில்லை. எனவே எனது தந்தை மிரட்டப்பட்டார். அவரிடம் பத்திரத்தாளில் எழுதி கையெழுத்து கேட்டனர். நான் அதற்கு மறுத்துவிட்டேன். இந்த நிலையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்துவிடக் கூடாது என்பதில் எதிர்த்தரப்பினர் பல்வேறு மிரட்டல் விடுத்தனர்.

இந்த நிலையில் வக்கீல் விஜயலட்சுமி தலையிட்டதை தொடர்ந்து கற்பழிப்பு குறித்து 8.8.08 அன்று நான் கொடுத்த புகாரின் மீது 16.4.09 அன்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக தகவல் அறியும் உரிமை சட்டப்படி போலீசார் மீது புகார் அளிக்கப்பட்டு சில போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இருந்து கற்பழிப்பு வழக்கு விசாரணைக்காக எனக்கு சம்மன் வந்தது. அந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தாமலும், டி.என்.ஏ. பரிசோதனை செய்யாமலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகை நகலை பெற முடியவில்லை. 

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உதவியையும் பெற முடியவில்லை. மகளையும் பாதுகாக்க வேண்டும். எனவே பயந்து வாழ்ந்து வருகிறேன். இந்த விஷயத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். பெண்களை கற்பழிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை, அதிகமாக மரண தண்டனையாக உயர்த்தி உத்தரவிட வேண்டும். கற்பழிப்பில் பிறக்கும் குழந்தைகளும், கற்பழித்தவரின் சொத்துகளை பெறும் உரிமைக்கு உட்பட்டவர்கள் என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/08/tamilnadu-rapists-should-be-hanged-rape-victim-plea-to-chennai-167621.html

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன